இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr என நம்பப்படுகிறது) தற்போது நிலைகொண்டுள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, கொழும்பு துறைமுகத்திற்கு அருகே மற்றொரு ஈரானிய கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
காலி கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ (Torpedo) தாக்குதலில் மூழ்கிய முதலாவது ஈரானியப் போர்க்கப்பலான IRIS Dena விவகாரத்தில், இதுவரை 87 பேரின் சடலங்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. மேலும், 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கப் போதுமான குளிர்சாதன வசதிகள் இல்லாததால், மேலதிக வசதிகளைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இரண்டாவது கப்பல் இலங்கையின் 12 கடல் மைல் தேசியக் கடற்பரப்பிற்குள் இல்லை என்றும், அது 200 கடல் மைல் வரையான பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். இப்பகுதியில் சர்வதேசச் சட்டங்களுக்கு அமைய மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே இலங்கை தலையிட முடியும் என அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் அரசியல் இலாபம் தேடுவதைத் தவிர்த்து, பொறுப்புடன் செயல்படுமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் இந்தியப் பெருங்கடலில் எதிரொலிக்கும் நிலையில், பிராந்திய அமைதியைப் பாதுகாப்பதே இலங்கையின் முதன்மை நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்புச் சபை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் விரிவான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.