மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 90 டொலர்களைத் தாண்டி உயர்ந்துள்ள போதிலும், அதனூடாக ஏற்படக்கூடிய பணவீக்கத் தாக்கங்களை எதிர்கொள்ளும் வலுவான நிலையில் இலங்கை இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். புளும்பெர்க் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த அவர், எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடாக, இந்த விலை உயர்வு இலங்கையின் பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், தற்போதைய பொருளாதார அடித்தளம் அதனைத் தாங்கிக்கொள்ளும் வல்லமை கொண்டது எனச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் இலக்கு பணவீக்கம் 5 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த மாத பணவீக்கம் வெறும் 1.6 சதவீதமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த சாதகமான இடைவெளியானது, உலகளாவிய விலை உயர்வால் ஏற்படக்கூடிய அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொள்ள இலங்கைக்கு ஒரு சிறந்த பாதுகாப்புத் தளத்தை வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டார். “கடந்த கால நெருக்கடியின் போது பணவீக்கம் 70 சதவீதமாக உயர்ந்திருந்தது. ஆனால், தற்போதைய பொருளாதாரக் குறிகாட்டிகள் அதனுடன் ஒப்பிடும்போது மிகவும் ஸ்திரமான மற்றும் தயார் நிலையில் உள்ளன” என்று அவர் மேலும் விளக்கினார்.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) ஒரே நாளில் 9 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டது. இந்தச் சூழலில், பணவீக்கத்தை 5 சதவீத இலக்கை நோக்கி நிலைநிறுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 7.75 சதவீத மட்டத்தில் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பணவீக்க அழுத்தம் அதிகரித்து வரும் போதிலும், இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் நம்பிக்கையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இலங்கையைப் போன்ற சிறிய மற்றும் திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கு, இத்தகைய உலகளாவிய விலை மாற்றங்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதில் மத்திய வங்கி கவனமாக உள்ளது. உலக சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேவை ஏற்படின் அதற்கேற்பப் பொருளாதார நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தத் தயாராக இருப்பதாகவும் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்தார்.