நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள எரிபொருள் QR முறைமையின் கீழ், ஒரு தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் ஒரு தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க ‘அத தெரண BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி, முறையற்ற நுகர்வைத் தவிர்ப்பதற்காகவே இந்த இறுக்கமான நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார். இதன் காரணமாக, வாகனங்களை முறையாகக் கைமாற்றம் செய்யாத அல்லது ஒரு அடையாள அட்டையில் பல வாகனங்களைப் பதிவு செய்ய முயல்பவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறான சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவே வணிகப் பதிவு இலக்கம் (BRN) ஊடாகப் பதிவு செய்யும் முறைமை தனிப்பிரிவாகச் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நெருக்கடி நிலையில், ஒரு தனிநபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதைத் தவிர்த்து, வளங்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், எரிபொருள் QR முறைமை கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் மீண்டும் முழுமையாக அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

