நாட்டின் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சவால்களைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே (Work from Home) தமது அன்றாடக் கடமைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், அரச நிறுவனங்களின் பணிகளைத் தடையின்றித் தொடர்வதற்கும் இந்த நடைமுறை எவ்வாறு உதவும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், வீட்டிலிருந்தே பணியாற்றும் முறைமை தொடர்பில் இதுவரை எவ்விதமான இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளன. இதனை முகாமைத்துவம் செய்வதற்கான குறுகிய காலத் தீர்வாகவே அரச ஊழியர்களுக்கான இந்த மாற்று பணிமுறை அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முறையான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இறுதி முடிவு எட்டப்பட்டதும் அது குறித்த அறிவிப்பு பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அபயரத்ன மேலும் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளைப் பாதிக்காத வகையில், இந்த மாற்றங்கள் குறித்து அரசாங்கம் மிக அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது.

