இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் (Google Maps) இருந்தால் போதும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் யாரிடமும் வழி கேட்காமல் சென்றுவிடலாம். அந்த அளவிற்குப் பிரபல வழிகாட்டிச் சேவை தளமாக இது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூகுள் மேப்ஸ் பல புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது.
கூகுள் மேப்ஸ், கூகுளின் ஏ.ஐ.யான ஜெமினியுடன் (Gemini AI) இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் செல்போனைத் தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும்.
கூகுள் மேப்ஸ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் உள்ள போக்குவரத்துத் தடைகள், மாற்றுப்பாதைகள் குறித்தான துல்லியமான தகவல்கள் கிடைக்கும். விபத்து ஏற்படக் கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களைக் கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும்.
இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, மேப்ஸ் புதிய அவதார் வசதியையும் வழங்குகிறது. பயண மேலாண்மையை எளிதாக்கும் வகையில், கூகுள் வாலட் (Google Wallet) இணைப்பும் வழங்கப்படுகிறது.
கூகுள் மேப்ஸ் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் வாங்கும் வசதி உள்ளிட்டவையும் புதிய அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாடுகள், கூகுள் மேப்ஸின் பயண வழிகாட்டுதல் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.