மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதால் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை) ஒரு வார கால குறைந்தபட்ச அளவைத் தொட்டுள்ளது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.4% சரிந்து $4,726.64 ஆகப் பதிவாகியுள்ளது. அமெரிக்க-ஈரான் மோதல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையிடப்படும் என்ற அச்சத்தால் எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைத் தாண்டியுள்ளமை, உலகளாவிய பணவீக்கக் கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிசக்தி விலைகள் உயருவதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி (Fed) இந்த ஆண்டு வட்டி விகிதங்களைக் குறைக்காது என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. பொதுவாக வட்டி விகிதங்கள் உயர்வாக இருக்கும்போது, வருமானம் தராத தங்கத்தின் மீதான ஈர்ப்பு முதலீட்டாளர்களிடையே குறைகிறது. ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 11% க்கும் மேலாகச் சரிவைச் சந்தித்துள்ளதாகச் சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்க டாலரின் மதிப்பு 0.3% உயர்ந்துள்ளதால், மற்ற நாணயங்களை வைத்திருப்பவர்களுக்குத் தங்கம் வாங்குவது அதிக செலவீனமான ஒன்றாக மாறியுள்ளது. மத்திய கிழக்கில் போர் ஏற்படுவதற்கு முன்பு, இந்த ஆண்டு இரண்டு முறை வட்டி விகிதக் குறைப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிசக்தி விலை உயர்வு காரணமாக, பணவியல் கொள்கையில் தளர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
தங்கத்தைத் தவிர மற்ற உலோகங்களிலும் விலை மாற்றம் காணப்படுகிறது. வெள்ளி விலை 1.9% சரிந்து $74.41 ஆகவும், பிளாட்டினம் 0.2% சரிந்து $2,041.89 ஆகவும் குறைந்துள்ளது. இருப்பினும், பல்லேடியம் 0.5% அதிகரித்து $1,527.95 ஆக உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் முட்டுக்கட்டை நிலை நீடிக்கும் வரை, உலகளாவிய உலோக மற்றும் எரிசக்தி சந்தைகளில் இந்த ஏற்றத்தாழ்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.