பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் எதிர்வரும் பெப்ரவரி 17 முதல் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் வருகை தரும் மேக்ரான், புதுடெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் (AI Impact Summit) பங்கேற்கவுள்ளார். அத்துடன், இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பைக்குச் செல்லும் அவர், அங்கு பிரதமர் மோடியுடன் இணைந்து ‘இந்தியா – பிரான்ஸ் கண்டுபிடிப்பு ஆண்டை’ (India-France Year of Innovation) உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும். இந்த உயர்மட்டப் பயணங்களின் போது, இந்தோ-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு, சிறிய ரக அணு உலைகள் (SMR) தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்துத் தலைவர்கள் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். குறிப்பாக, கடந்த ஆண்டு மோடி பிரான்ஸ் சென்றபோது கையெழுத்தான பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து மேக்ரான்-மோடி சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.