மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதன் தாக்கத்தால் உலகளாவிய ரீதியில் விமான எரிபொருள் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு, முன்பு ஒரு கலன் (Gallon) 2.25 அமெரிக்க டொலராக இருந்த விமான எரிபொருளின் விலை, தற்போது 4 டொலர்களைத் தாண்டி அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விலையேற்றம் விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகளைப் பெருமளவில் அதிகரித்துள்ளதால், அதன் நேரடித் தாக்கம் விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் எதிரொலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஏற்கனவே முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளின் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அமைச்சர் உறுதியளித்துள்ளார். புதிதாகப் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே அன்றைய சந்தை விலைக்கு ஏற்பக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாகப் பல நாடுகளின் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதால், விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் மேலதிக எரிபொருள் செலவை விமான நிறுவனங்கள் சுமக்க வேண்டியுள்ளது. இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்குக் குறுகிய காலத்திற்குச் சலுகை விலையில் எரிபொருள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உலகளாவிய சூழலில் சில விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள அதேவேளை, பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளும் விமான நிறுவனங்களுக்குச் சவாலாக மாறியுள்ளன. இக்கட்டான இந்தச் சூழலைக் கருத்திற்கொண்டு, விமான நிறுவனங்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் திட்டமிட்டும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார். சர்வதேச மோதல்கள் முடிவுக்கு வரும் வரை இந்த விலை மாற்றங்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

