கிளங்கன் வைத்தியசாலையில் கொடூரம்: சடலத்திற்கு பாலியல் இழுக்கு செய்த சிற்றூழியர்கள் – மக்கள் போராட்டம்!

06 3

ஹட்டன் – ஏபோட்ஸிலி தோட்டப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. இதன்போது அங்கு பணியாற்றும் மூன்று சிற்றூழியர்கள் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியானதையடுத்து, உறவினர்களும் பொதுமக்களும் வைத்தியசாலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் பஷ்லி, இது குறித்து விளக்கமளித்தார். “சடலம் வைக்கப்பட்டிருந்த நிலை குறித்து முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து, பிரேத அறையின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் மூன்று சிற்றூழியர்கள் அநாவசியமான முறையில் பிரேத அறைக்குள் சென்று வந்த காட்சிகள் பதிவாகியுள்ளன,” என அவர் உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக உள்வாரியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“குற்றவாளிகளைக் கைது செய்”, “வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை வெளிப்படுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் கோஷமிட்டனர். சடலங்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை குறித்து மக்கள் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இதனால் வைத்தியசாலை வளாகத்தில் நீண்ட நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று சந்தேக நபர்களையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் மலையகப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version