சமூக ஊடகங்களுக்குத் தடை: ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரான்ஸும் அதிரடி நடவடிக்கை!

Untitled 20

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்ட வரைவு மீது பிரெஞ்சு செனட் உறுப்பினர்கள் நேற்று (மார்ச் 31, 2026) செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதன் மூலம், இளைய தலைமுறையினரின் மனநலம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸும் இணைந்துள்ளது. அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான அரசாங்கம், வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்குள் இந்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மெட்டா (Meta), டிக்டாக் (TikTok), ஸ்னாப்சாட் (Snapchat) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற தளங்களை 16 வயதுக்குட்பட்டோர் பயன்படுத்துவதற்கு உலகின் முதல் தடையை விதித்த ஆஸ்திரேலியாவின் வழியைப் பிரான்ஸ் பின்பற்றும். “சமூக ஊடக நிறுவனங்கள் சுயக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் என எதிர்பார்க்க முடியாது; அரசாங்கங்களே இதனை ஒழுங்குபடுத்த வேண்டும்” என இந்த மசோதாவை வரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் லாரே மில்லர் வலியுறுத்தியுள்ளார். ஸ்மார்ட்போன்களின் அதீத பயன்பாடு சிறுவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்தச் சட்ட வரைவு பிரெஞ்சு செனட் சபையில் சில திருத்தங்களைச் சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து சமூக ஊடகங்களுக்கும் ஒட்டுமொத்தத் தடை விதிப்பதற்குப் பதிலாக, குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் குறிப்பிட்ட தளங்களை மட்டும் தடை செய்யவும், ஏனையவற்றைத் பெற்றோரின் அனுமதியுடன் பயன்படுத்த அனுமதிக்கவும் செனட்டர்கள் முன்மொழிந்துள்ளனர். எது எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கீழ்சபையே இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டுள்ளது.

இளம் வயதினர் மத்தியில் இந்தத் தடை குறித்துக் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 15 வயதுடைய பிரெஞ்சு மாணவர் லூயிஸ் ஸ்போனிக் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், சமூக ஊடகங்கள் நேரத்தை வீணடிக்கச் செய்யும் என்பது உண்மைதான் என்றாலும், அவை நண்பர்களுடன் தொடர்பைப் பேணவும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு பாலமாக இருப்பதாகத் தெரிவித்தார். இருந்தபோதிலும், அண்மையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், இளையோருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் செயலிகளை வடிவமைத்ததற்காக மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளமை, இத்தகைய கட்டுப்பாடுகளின் அவசியத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.

 

Exit mobile version