பிலியந்தலை பகுதியில் கடந்த மாதம் கொள்ளையிடப்பட்ட 14 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டியுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2025 டிசம்பர் 12 ஆம் திகதி பிலியந்தலை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த முச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாகக் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இரகசியத் தகவலின் அடிப்படையில் இரத்மலானை பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு மறைந்திருந்த நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
23 முதல் 28 வயதுக்கு இடைப்பட்ட இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டி சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்டுத் தற்போது காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
தற்போது வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களின் பாதுகாப்பு குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.