கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பின்னாலுள்ள சூத்திரதாரிகளைக் கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, இது திட்டமிடப்பட்ட பாதாள உலகக் குற்றக் குழுக்களுக்கு (Organized Crime Groups) இடையிலான நீண்டகால மோதலின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் வந்த ஆயுததாரிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் காயமடைந்த 44 வயதுடைய தந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த 4 வயது சிறுவன் மற்றும் 3 வயது சிறுமி ஆகியோர் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே (LRH) சிறுவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நகரின் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் பொலிஸ் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.