அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (05.03.2026) உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த அதிரடித் தகவலை நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளது.
வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியமை மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுடன் சுரேஷ் சலேவுக்குத் தொடர்பிருப்பதாக சி.ஐ.டி நீதிமன்றில் தெரிவித்தது. இதற்கமைய, கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள 35882/24 இலக்க வழக்கின் கீழ் அவர் சந்தேகநபராக இணைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, போதிய ஆதாரங்களின்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுக்கள் குறித்த விசாரணைகளின் போதே இந்த விபரங்கள் வெளியாகின.
சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் நேற்று முன்வைத்த கோரிக்கைகளான, வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதித்தல் மற்றும் மேலதிக சந்திப்பு நேர ஒதுக்கீடு ஆகியவற்றை நீதிமன்றம் நிராகரித்தது. இருப்பினும், வழக்குக் கோப்புகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை வழங்குவதற்கு நீதவான் அனுமதி வழங்கினார். சந்தேகநபர் தற்போது சி.ஐ.டி வசம் தடுப்புக்காவலில் இருப்பதால், அவரைத் திணைக்களத்திற்கு நேரில் வந்து பார்வையிடுமாறு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக, நீதவான் பொருத்தமான ஒரு நாளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று சுரேஷ் சலேயைப் பார்வையிட்டு வாக்குமூலங்கள் மற்றும் விசாரணை நிலைமைகளை ஆய்வு செய்யவுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளைக் கண்டறியும் தற்போதைய அரசாங்கத்தின் தீவிர விசாரணைகளில், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஒருவரே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருப்பது அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

