ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

09 1

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நேற்று இரவு அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகளில் கிடைத்துள்ள முக்கிய சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட குழுவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சுரேஷ் சலேவை 72 மணித்தியாலங்கள் (மூன்று நாட்கள்) தடுத்து வைத்து விசாரணை செய்யப் பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர். இத்தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் மற்றும் சூத்திரதாரிகளுடன் அவருக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்தும், தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது. குறிப்பாக, சனல் 4 ஆவணப்படத்தில் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ள நிலையில், புலனாய்வுத் துறையின் உயர் பதவியில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதாக அண்மையில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வழங்கிய உறுதிமொழியின் தொடர்ச்சியாகவே இக்கைது இடம்பெற்றுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் மேலதிக சாட்சியங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version