நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனச் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சாரத் தட்டுப்பாடு தொடர்பான இவ்வாறான ஆதாரமற்ற பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி விநியோகத்தைப் பொறுத்தவரை, இதுவரை திட்டமிட்டபடி பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி, முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் இதுவரை 22 கப்பல்கள் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலக்கரி விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றி வழங்க முடியும் என விநியோகஸ்தர்கள் உறுதி அளித்துள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்தியைப் பொறுத்தவரை எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதுடன், தேவை ஏற்படும் பட்சத்தில் மேலதிக நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் இறுதி வரை மின் உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதை எரிசக்தி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்பது அமைச்சின் தெளிவான விளக்கமாகும்.
பொதுமக்கள் இது போன்ற தவறான மற்றும் திசைதிருப்பும் பிரசாரங்களைத் தவிர்த்து, உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டும் கவனத்தில் கொள்ளுமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் மின் உற்பத்தி நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த எவ்வித அச்சுறுத்தலும் தற்போதைக்கு இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.