தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று வியாழக்கிழமை (நவம்பர் 27) மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் வகையில், வருடா வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. மாவீரர் ஒருவரின் தாயாரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாவீரர்களின் உறவினர்கள், பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியது, இந்நிகழ்வின் உணர்வுபூர்வத் தன்மையை வெளிப்படுத்தியது.

