மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை ஒன்றிணைத்து அவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு, மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மன்னார் இரணைஇலுப்பை குளம், முள்ளிக்குளம், பண்டிவிருச்சான் பிரதேசங்களைச் சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர் இந்த நிகழ்வின்போது கெளரவிக்கப்பட்டனர்.
மாவீரர்களின் உறவுகளுடன் 150க்கும் மேற்பட்டோர் பங்குபற்றலுடன் இந்த மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. அருட்தந்தையர்கள், முன்னைநாள் போராளிகள், மாவீரர் பெற்றோர்கள் மற்றும் மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
குறித்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்குக் கெளரவிப்பு வழங்கப்பட்டதுடன், கெளரவிப்பு நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

