நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு காணப்பட்டாலும், பாடசாலை நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கோ அல்லது மாணவர்களுக்கு இணையவழி (Online) கற்றல் முறையை அறிமுகப்படுத்துவதற்கோ கல்வி அமைச்சு இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று தொடரும் என அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இலங்கையின் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதில் சவால்களை உருவாக்கியுள்ளன. இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (15) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், இக்கட்டான சூழ்நிலையிலும் பொதுச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது மற்றும் எரிபொருள் விநியோகத் தாக்கங்களை முகாமைத்துவம் செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
கடந்த காலங்களில் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட அனுபவங்கள் இருந்தபோதிலும், தற்போது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. மாணவர்களின் கற்றல் உரிமையைப் பாதுகாப்பதும், கல்வித் திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதும் தற்போதைய முன்னுரிமையாக உள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்காலத்தில் எரிபொருள் விநியோக நிலைமைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டு, பாடசாலை நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டால், அது குறித்த அறிவிப்புகளை அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிடும். எனவே, வதந்திகளை நம்பாமல், அமைச்சு வழங்கும் உத்தியோகபூர்வ தகவல்களைப் பின்பற்றுமாறு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

