2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் பாவனை என்பது பூஜ்ஜியமாகவே காணப்பட்டது என கட்டைக்காடு ஆலயப் பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் தெரிவித்துள்ளார்.
கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டுக்கழகம் நடத்திய உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் தற்போது தமிழர் தாயகத்தில் போதைப்பொருளின் தாக்கம் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. நாளாந்தம் இளைஞர்கள் இதற்கு அடிமையாகி வருவது கவலையளிக்கிறது. சிறந்த முறையில் விளையாட உடல் ஆரோக்கியம் மிக அவசியம். ஆனால் இன்று வாழ வேண்டிய பல இளைஞர்கள் போதையினால் தமது வாழ்க்கையைத் தாமே அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
விளையாட்டுக் கழகங்களின் பொறுப்பு: போதையற்ற ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் களம் அமைக்க வேண்டும்.
2009-ஆம் ஆண்டிற்கு முன்னதாக இருந்த ஒழுக்கம் நிறைந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்வியலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என அவர் அனைத்து விளையாட்டு வீரர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார். எமது சமூகம் போதையற்ற, ஒழுக்க சீலர்களைக் கொண்ட ஆரோக்கியமான சமூகமாக மாற வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.