ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிற்கு (Isaac Herzog) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளது.
ஆட்சியில் இருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில், நெதன்யாகு மீது கையூட்டல், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன. அவற்றில் சில:
அவரும் அவரது மனைவியும் கோடீஸ்வரர்களிடமிருந்து $260,000 டொலர் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை வாங்கியமை.
தனக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியமை.
நெதன்யாகு மீதான வழக்கை கைவிடும்படி ட்ரம்ப், இஸ்ரேல் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “இஸ்ரேலிய நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து, நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், அவருக்கு எதிரான நடவடிக்கை அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முடியாதது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கடிதத்திற்குப் பதிலளித்த இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம், “யாராவது மன்னிப்பு பெற விரும்பினால், அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தன் மீதான ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நெதன்யாகு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்று ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், ட்ரம்ப்பின் பெரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.