ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா (Baba Vanga) 2026-ஆம் ஆண்டு குறித்து வெளியிட்ட எச்சரிக்கையை மீண்டும் உலக அளவில் விவாதப்பொருளாக்கியுள்ளது. 1996-ஆம் ஆண்டு மறைவதற்கு முன்னர் அவர் வெளியிட்ட கணிப்பின்படி, 2026-ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகப்போர் மூள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போதைய மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், அவரது கணிப்புடன் ஒத்துப்போவதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 28 அன்று இடம்பெற்ற தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ஏழு நாடுகளை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. வல்லரசு நாடுகள் நேரடியாகப் போரில் ஈடுபடும் என்றும், இதன் விளைவாக உலகளாவிய கரன்சி மதிப்பு வீழ்ச்சி, வங்கிகள் திவால் நிலை மற்றும் கடுமையான பணவீக்கம் ஏற்படும் என்றும் பாபா வாங்கா தனது கணிப்பில் எச்சரித்திருந்தார். போர் காரணமாக ஐரோப்பாவின் பல பகுதிகள் மக்கள் நடமாட்டம் அற்ற தரிசு நிலங்களாக மாறும் என்றும், சுற்றுச்சூழல் அணு ஆயுதங்களால் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தது தற்போதைய உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, இந்த உலகப்போரின் இறுதியில் ரஷ்யா ஒரு பெரும் வல்லரசாக உருவெடுக்கும் என்றும், அந்நாட்டின் முக்கியத் தலைவர் ஒருவர் உலக அரசியலில் நீக்கமற நிறைந்த செல்வாக்கு மிக்கவராக மாறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9/11 இரட்டைக்கோபுரத் தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் 2004 சுனாமி போன்ற உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை அவர் துல்லியமாகக் கணித்ததாக நம்பப்படுவதால், தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பாக எழுந்துள்ள இந்த எச்சரிக்கையை உலகம் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
அறிவியல் மற்றும் புவிசார் அரசியல் நிபுணர்கள் இத்தகைய கணிப்புகளை மூடநம்பிக்கையாகக் கருதினாலும், போரின் தீவிரமும், அது உலகளாவிய எரிசக்தி மற்றும் நிதிச் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கங்களும் பாபா வாங்காவின் கணிப்புடன் ஒத்துப் போவதாகப் பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மார்ச் – ஏப்ரல் மாதங்களில் போர் சூழல் எந்த திசையை நோக்கிச் செல்லும் என்பது உலக வல்லரசுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. அமைதிக்கான சர்வதேச முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், பாபா வாங்காவின் எச்சரிக்கைகள் நிதர்சனமாகிவிடுமோ என்ற கவலை உலக மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

