தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களைப் பதவி விலகச் சொல்வது கேலிக்கூத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று வலுசக்தி அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட உரையில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“அமைச்சர்களைப் பதவி விலகக் கூறும் குறித்த நபருக்கு முதுகெலும்பு இருந்தால், உங்கள் பிள்ளைகளின் இருப்பிடம் பற்றித் தெரிவிக்க முடியுமா? அது தொடர்பிலான துணிச்சல் அவருக்கு இருக்கின்றதா?” என இளங்குமரன் கேள்வியெழுப்பினார்.
மேலும் “நாடாளுமன்றில் கமராக்களுக்கு முன்னால் வீரவசனம் பேசுபவரும் இருக்கின்றார். ‘மம நம’ என கூறியதற்காக விமர்சிக்கின்றார். ஆனால் அவரால் தமிழில் ஒரு முகநூல் பதிவைச் சரியாக வெளியிட முடியவில்லை.”
ஆனால் தமிழர்களைக் கொன்று அழித்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பகின்றார்கள். இவை ஒன்றும் மக்களுக்கானதில்லை. அவரது கதையால் ஒருபோதும் யாழ். மாவட்டம் முன்னேறாது.
“இனவாத வலையேற்பட்டபோது, எதிர் தரப்பில் இருந்த தமிழ் மற்றம் சிங்கள எம்.பிக்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைந்திருந்தனர். இவர்களால் இனவாத அரசியலையே முன்னெடுக்க முடியும்,” என்று இளங்குமரன் குற்றம் சாட்டினார்.
“இனவாதத்தால் பாதிக்கப்படப்போவது இங்குள்ள எம்.பிக்களின் பிள்ளைகள் அல்ல. அவர்கள் தென்பகுதியில் கல்வி கற்று வேறு வேறு நாடுகளில் உள்ளனர். ஆனால் பாதிக்கப்படப்போவது தமிழர் பகுதியில் வாழும் எதிர்காலச் சந்ததியினரே,” என்றார்.
இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி., சபாநாயகரை நோக்கி இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்:
“சபாநாயகரே, இவர் இன்று வலுசக்தி அமைச்சு தொடர்பில் கதைத்த விடயங்கள் என்ன? எதுவும் இல்லை. நிலையியல் கட்டளையின் படி நேற்றுப் பிரேரணைக்கு முரணாகக் கதைத்ததற்காக எனது நேரத்தை இல்லாது செய்தீர்கள். ஆனால் இன்று அவ்வாறு நடக்கவில்லை. அரசாங்கத்துக்கு ஒரு நியாயம் எமக்கு ஒரு நியாயமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

