திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்ட பின், அதை மீண்டும் அதே இடத்தில் நிறுவ அரசாங்கம் உத்தரவிட்டதை எதிர்த்து, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ. கௌதமன் அவர்கள், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அவர்களைக் கடுமையாக விமர்சித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை அவர் தனது அறிக்கையில் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார்:
“நீங்கள் இனவாதம் அற்ற ஒருவர் என நம்பி உங்களுடைய தேசிய மக்கள் சக்திக்கு எங்கள் தமிழர்கள் பெருவாரியான வாக்குகளை அளித்திருந்ததை கடந்த பொதுத்தேர்தலில் நாங்கள் கண்கூடாகப் பார்த்திருந்தோம். இருப்பினும், நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்தை பார்க்கின்ற போது கடந்த கால ஆட்சியாளர்களான ராஜபக்ச, ரணில் ஆகியோரின் வழியிலா அநுரகுமார திசாநாயக்க நீங்களும் என்ற கசப்பான கேள்வி எழுகின்றது.”
சிலை அகற்றப்பட்ட போது ஏற்பட்ட ஆரம்ப திருப்தியும், பின்வாங்கியதற்கான வேதனையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சட்டவிரோதமாக வைக்க முயற்சித்த புத்தர் சிலையை அகற்றுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டபோது அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அந்த புத்தர் சிலையை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறு கூறியபோது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.”
“இருப்பினும், அந்த மகிழ்ச்சி சில மணிநேரமே நீடித்தது என்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. சட்டவிரோத புத்தர் சிலையை அகற்றச் சொல்லிய உங்களது அரசாங்கமே மீளவும் அங்கே அந்த சிலையை வைக்குமாறு கூறியது.”
அநுரகுமார திசாநாயக்க அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை உணரவில்லை எனக் குறிப்பிட்ட வ.கௌதமன், உணர்வு ரீதியான வலியை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்:
“அடித்தவன் தொடர்ந்து அடிக்கும் போது ஏற்படுகின்ற வலியை விட அணைப்பதுபோல் அணைத்துவிட்டு அதே கரங்களால் அடிக்கின்ற வலி என்பது சொல்லில் அடங்காத ஒரு பெருவலி, இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கின்ற தாங்கள் இதனை உணரவில்லையா?”
இனியும் நிலைமை கெட்டுப் போகவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு இறுதிக் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இனியும் எதுவும் கெட்டுப் போகவில்லை, அந்த புத்தர் சிலை விவகாரத்துக்கு தமிழ் மக்களின் விருப்பப்படியான தீர்வை கொடுங்கள், அந்த சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டு உங்களின் அரசியல் அறத்தை காப்பாற்றுங்கள், அதன் மூலமாவது புண்பட்ட எங்கள் நெஞ்சு ஓரளவேனும் ஆறுதலடையும்.”