அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் கீழ், பொதுப் போக்குவரத்துத் துறையில் நவீன மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் முறை ஊவா மாகாணத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அறிமுக விழா நேற்று (09) பதுளையில் உள்ள ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகள், பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முன்னணி வங்கிப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூலம், வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி எவ்வாறு கொடுப்பனவுகளைப் பெறுவது மற்றும் இதன் மூலம் பயணிகளுக்கும் உரிமையாளர்களுக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் இந்த டிஜிட்டல் கட்டண வசதியை அடுத்த சில மாதங்களுக்குள் முழுமையாக வழங்குவதற்குப் பேருந்து உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் சில்லறைப் பணப் பற்றாக்குறை இன்றி, தடையற்ற பயண அனுபவத்தைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.