நான்காவது ஐரோப்பிய ஒன்றிய – இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் (EU-Indo-Pacific Ministerial Forum) கலந்துகொள்வதற்காக வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று புதன்கிழமை (நவம்பர் 19) பெல்ஜியம் செல்லவுள்ளார்.
பிரதி அமைச்சர் இன்று முதல் நவம்பர் 22ஆம் திகதி வரை பிரஸ்ஸல்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, ஐரோப்பிய ஒன்றியம்-இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தின் உயர்மட்ட அமர்வுகளில் பிரதி அமைச்சர் பங்கேற்பார்.
பரஸ்பர ஒத்துழைப்புள்ள முக்கிய துறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணம், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதுடன், இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்த முக்கியக் கலந்துரையாடல்களில் இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும் அமையும்.

