அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை – சேருவில பகுதிக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து நிவாரணம் வழங்குவது அநீதியானது. பாதிக்கப்பட்ட முழு நாட்டு மக்களுக்கும் பாகுபாடின்றி உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கம் தற்போது பின்பற்றும் சுற்றுநிரூபங்களின்படி நிவாரணம் வழங்கினால், பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதமானவர்களுக்குக் கூட உதவி கிடைக்காது. எனவே, அரசாங்கம் உணர்வுபூர்வமாகவும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் செயல்பட வேண்டும்.
கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார் மற்றும் விகாரைகள் மூலம் பெறப்படும் நேரடித் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நிவாரணங்களை விநியோகிக்க வேண்டும்.
மக்கள் வெறும் உணவுப் பொதிகளை மட்டும் எதிர்பார்க்கவில்லை; இழந்த வாழ்வாதாரத்தை மீட்கவே விரும்புகிறார்கள். குறிப்பாக, மாவிலாறு அணைக்கட்டுப் பகுதிகளில் வீடுகள் சேதமடையாவிட்டாலும், கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மறைமுகப் பாதிப்புகளையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் அசமந்தப்போக்கைக் கைவிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தொழில்களைத் தொடங்கத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.