ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா அடுத்த 5 நாட்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (மார்ச் 23, 2026) அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய கிழக்கில் போர் மூளும் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த எண்ணெய் விலைகள், இந்த இராஜதந்திர நகர்வினால் கணிசமாகக் குறைந்துள்ளன.
சர்வதேச சந்தையில் முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை சுமார் 15% சரிந்து, ஒரு பீப்பாய் 96 டொலராகக் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டொலருக்கும் கீழ் குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 13.5% சரிந்து, ஒரு பீப்பாய் 85.28 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் (Energy Infrastructure) மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா முன்னதாக எச்சரித்திருந்தது. இதனால் ஹோர்முஸ் நீரிணை ஊடாக நடைபெறும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்து காணப்பட்டன. இருப்பினும், ஈரானுடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் “ஆக்கபூர்வமாக” இருந்ததாகத் தெரிவித்த ட்ரம்ப், அடுத்த 5 நாட்களுக்குத் தாக்குதல் நடத்த வேண்டாம் எனத் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளமை சந்தையில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை வீழ்ச்சி இலங்கையைப் போன்ற எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகளுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ள போதிலும், இது ஒரு தற்காலிக மாற்றமா அல்லது நிரந்தர அமைதிக்கு வழிவகுக்குமா என்பது வரும் நாட்களின் பேச்சுவார்த்தைகளிலேயே தங்கியுள்ளது. ஈரானிய அதிகாரிகள் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை ஒரு ‘உளவியல் போர்’ எனக் கூறி மறுத்திருந்தாலும், சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு உலகப் பொருளாதாரத்திற்குச் சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.