முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மீதான வழக்கு: ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைப்பு!

03 16

2022 ஆம் ஆண்டில் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அண்மையில் சட்டவிரோதமாக வீதி நாடகமொன்றை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 பேர் மீதான வழக்கு, ஆகஸ்ட் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (மார்ச் 16) கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழுமையாக நிறைவு செய்துள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகச் சமர்ப்பித்துள்ளதாகவும் கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றத்தை மன்றில் சமர்ப்பிப்பதற்காகவே இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டங்களின் ஒரு அங்கமாக முன்னெடுக்கப்பட்ட குறித்த வீதி நாடகம், உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version