உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் உள்ளிட்ட சொத்துக்களை, அவரது சகோதரரான இஃப்லால் அஹமட்டிடம் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தச் சொத்துக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கடந்த காலங்களில் சி.ஐ.டி-க்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டும், அவர்கள் அதனைச் செய்யத் தவறியுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார். இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தத் தவறினால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் எச்சரித்தார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடுவது தவறான செயலாகும் எனத் தெரிவித்த அவர், எக்காரணம் கொண்டும் மேலதிக அவகாசம் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தற்போது மத்திய வங்கியின் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சொத்துக்கள் தனக்குச் சொந்தமானவை எனக் கூறி, தாக்குதல்தாரிகளின் சகோதரரான இஃப்லால் அஹமட் சட்டத்தரணி ஊடாகத் தொடர்ந்த மனுவிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இல்ஹாம் அஹமட் மற்றும் இன்ஷாப் அஹமட் ஆகியோரின் சகோதரரே இந்த இஃப்லால் அஹமட் ஆவார். சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

