அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

17 14

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (மார்ச் 15) பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைக் கருத்திற்கொண்டே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி சப்புகஸ்கந்த, டெனிமுல்ல சந்திப்பிற்கு அருகில் அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர், அவரது சிறு குழந்தை மற்றும் மற்றொரு பெண் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். விபத்து நடந்த காலப்பகுதியில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அசோக ரன்வல கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அசோக ரன்வலவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவும், அவர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்த அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையைப் பரிசீலித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும், இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளைச் சரியாக முன்னெடுக்கத் தவறியதாகச் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் சில பொலிஸ் அதிகாரிகள் மீது முன்னதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது குறித்த மேலதிக விசாரணைகளைச் சிறப்புப் பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இது குறித்த மேலதிக சட்ட நடவடிக்கைகள் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version