சர்வதேச வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான Numbeo வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான சொத்து விலைச் சுட்டெண்ணில் (Property Prices Index), உலகிலேயே வீடு வாங்குவதற்குச் செலவு கூடிய நகரங்களின் பட்டியலில் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் நிலத்தின் மதிப்பு கட்டுப்பாடின்றி அதிகரித்ததே இந்நிலைக்குக் காரணமாகும். இந்தப் பட்டியலில் கொழும்பு நகரம் ஹாங்காங், மும்பை மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களையே பின்னுக்குத் தள்ளியுள்ளது.
கொழும்பில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கு, தனது முழு வருமானத்தையும் எவ்வித செலவுமின்றி சுமார் 55 ஆண்டுகள் சேமிக்க வேண்டியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது சராசரி ஆண்டு வருமானத்தைப் போல 55 மடங்கு அதிகமான விலையாகும். அத்துடன், வீட்டுக் கடன் (Mortgage) தவணைகள் சராசரி வருமானத்தை விட 700 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால், சாதாரண மக்கள் சொந்த வீடு வாங்குவது என்பது முற்றிலும் இயலாத ஒன்றாக மாறியுள்ளது.
இந்த அசாதாரண விலை உயர்வையும், ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் ‘விலை மாபியாக்களையும்’ ஒடுக்குவதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு புதிய சட்டச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளது. காணி மற்றும் வீடுகளின் விலைகளைக் கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை அமைப்பு (Regulatory Body) ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காகக் காணி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக “A Place of One’s Own – A Beautiful Life” என்ற திட்டத்தின் கீழ் 31,000 புதிய வீடுகளைக் கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 2,500 நகர்ப்புற வீடுகள் வழங்கப்படவுள்ளன. சிமெந்து மற்றும் இரும்பு போன்ற கட்டுமானப் பொருட்களுக்கான வரிகளைக் குறைத்து, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் வீடுகள் கிடைப்பதை உறுதி செய்வதே இச்சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும்.