தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல் உரையின் போதே அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து விரிவான ‘வெள்ளை அறிக்கை’ (White Paper) ஒன்றை வெளியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், அரசாங்கத்தின் கஜானா காலியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிதிச் சூழலின் உண்மையான நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதே தனது முதல் கடமை என்று கூறினார்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்ற பின்னரே அதன் முழுமையான பாதிப்புகள் தெரியவரும். நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையை (Transparency) நான் விரும்புகிறேன். எனவே, தற்போதைய நிதிச் சிக்கல்கள் என்ன? கடன் அதிகரித்ததற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதன் பின்னரே எமது திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்,” எனத் தெரிவித்தார்.
தமிழகத்தின் தற்போதைய நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வீண் விரயங்களைக் குறைத்து, வருவாயைப் பெருக்குவதற்கான புதிய பொருளாதாரக் கொள்கைகளைத் தனது அரசு வகுக்கும் என அவர் உறுதி அளித்தார். ஊழலற்ற நிர்வாகம் மற்றும் சமூக நீதியே தனது அரசின் தாரக மந்திரம் எனத் தெரிவித்த விஜய், பொய் வாக்குறுதிகளைத் தராமல், சாத்தியமான திட்டங்களை மட்டுமே செயல்படுத்துவேன் என்றும் கூறினார். குறிப்பாக, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் மாநில சுயாட்சி போன்ற விடயங்களில் எவ்வித சமரசமும் இருக்காது என அவர் வலியுறுத்தினார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து அவர் மறைமுகமாகச் சாடியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேவேளை, இந்த வெள்ளை அறிக்கை வெளியான பின்னரே புதிய அரசின் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த முழுமையான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் புதிய ‘சர்க்கார்’ (அரசாங்கம்) தனது முதல் அடியை வெளிப்படைத்தன்மையுடன் தொடங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.