இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, அங்கீகரிக்கப்படாத மூன்றாம் நபர் ஒருவரின் கைகளுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) பாரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான விபரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்த நிதி மோசடியின் பின்னணியைக் கண்டறியும் நோக்கில், திறைசேரியில் பயன்படுத்தப்படும் கணினிகள், மடிக்கணினிகள், தொலைபேசிகள் மற்றும் அங்கிருந்த சிம் அட்டைகள் உள்ளிட்ட அனைத்து இலத்திரனியல் உபகரணங்களையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். இவை தற்போது அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் உதவியுடன் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், இந்த ஆழமான நிதி மோசடி குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) பகிரங்கக் கூட்டத்தைக் கூட்டி, கணக்காய்வாளர் நாயகத்துடன் இணைந்து விசாரிக்க வேண்டும் என ‘ஃப்ரீ லோயர்ஸ்’ (Free Lawyers) அமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விடயமாக, குறித்த நிதி மோசடியுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷ, கடந்த ஏப்ரல் 30-ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிதி மோசடி விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த உயர் அதிகாரியின் மரணம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.