சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

25 6950d161858e7

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம் மற்றும் தனிநபர் வாழ்க்கை தொடர்பாக அறிவித்த புதிய அபராத விதிமுறைகள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கிராமக் குழுவினால் தன்னிச்சையாக வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில் மாகாணத்திற்கு வெளியே உள்ள ஒருவரைத் திருமணம் செய்தால் 1,500 யுவான் அபராதம்.

திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதிகளுக்கு ஆண்டுதோறும் 500 யுவான் அபராதம். திருமணத்திற்கு முன் கருவுற்றால் அல்லது திருமணமான 10 மாதங்களுக்குள் குழந்தை பிறந்தால் 3,000 யுவான் அபராதம்.

தம்பதியினர் சண்டையிட்டு, அதனைத் தீர்க்க கிராம அதிகாரிகள் தலையிட்டால் தலா 500 யுவான் அபராதம். மது அருந்தி ரகளையில் ஈடுபட்டால் 5,000 யுவான் வரையிலும், வதந்திகளைப் பரப்பினால் 1,000 யுவான் வரையிலும் அபராதம்.

இந்த வினோத சட்டங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானதை அடுத்து, மெங்டிங் (Mengding) நகர அரசாங்கம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது:

இந்த அறிவிப்பு மிகவும் “அசாதாரணமானது” என்றும், மேலிடத்தின் அனுமதியின்றி கிராமக் குழு தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அந்த அபராத அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டவிரோத அறிவிப்பை வெளியிட்டவர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய விதிமுறைகளை ஒருபோதும் ஏற்க முடியாது எனச் சீன சமூக வலைத்தளப் பயனாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Exit mobile version