செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்கள் மூலம் பயனாளர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுவதைத் தடுக்கவும், உணர்வு ரீதியாக அவர்கள் பாதிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தவும் சீனா கடுமையான புதிய சட்ட விதிகளை முன்மொழிந்துள்ளது.
சீனாவின் இந்த புதிய வரைவுச் சட்டத்தில், சாட்போட்களுடனான உரையாடலில் ‘தற்கொலை’ (Suicide) என்ற சொல் பயன்படுத்தப்பட்டால், உடனடியாக ஒரு மனித அதிகாரி அந்த உரையாடலில் தலையிட்டு வழிகாட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் பதிவு செய்த பயனாளர்கள் அல்லது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாதாந்த பயனாளர்களைக் கொண்ட AI நிறுவனங்கள், ஆண்டுதோறும் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் தணிக்கைகளுக்கு (Audits) உட்பட வேண்டும்.
பயனாளர்களின் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை AI நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தீவிர உணர்ச்சி மாற்றங்கள் அல்லது சாட்போட்களுக்கு அடிமையாகும் தன்மையைக் கண்டால் நிறுவனங்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும்.
சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பதிவு செய்யும் போது தங்களது பாதுகாவலரின் விபரங்களை வழங்க வேண்டும். சுய-தீங்கு தொடர்பான உரையாடல்கள் நிகழும் போது பாதுகாவலருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
அமெரிக்காவில் ChatGPT உடன் உரையாடிய நபர் ஒருவர், சாட்போட் வழங்கிய தவறான தகவலால் தனது தாயைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவத்தைத் தொடர்ந்தே இத்தகைய கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில், OpenAI நிறுவனம் இவ்வாறான ஆபத்துகளைக் கையாள ‘தயார்நிலைத் தலைவர்’ (Head of Preparedness) என்ற புதிய உயர் பதவியை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.