யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையினால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை, நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக அண்மையில் அவர்கள் நயினாதீவு விகாராதிபதியைச் சந்தித்துத் தமது காணிகளை விடுவிக்க உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் ஒரு கட்டமாக, இன்று வெள்ளிக்கிழமை (02) தையிட்டி பகுதிக்கு விகாராதிபதி தலைமையிலான பிக்குகள் குழு விஜயம் மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய விகாராதிபதி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
விகாரைக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த, தற்போது பற்றை வளர்ந்து காணப்படும் காணிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.
தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டு, விகாரைக்கான எல்லைகள் முறைப்படுத்தப்படுவது குறித்து இந்த விஜயத்தின் போது முக்கியமாக ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆக்கபூர்வமான நகர்வு தையிட்டி காணிப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.