நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் இடைநிறுத்தத்திற்கு எதிராக வழக்கு: மார்ச் 18-ல் விசாரணை

06 2

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனது பணி இடைநிறுத்தத்தை எதிர்த்துத் தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் மார்ச் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. முறையான விசாரணைகள் இன்றித் தன்னை பணியிலிருந்து நீக்கிய தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான் அபயசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்குத் தொடர்பில் முழுமையான அவதானிப்புகளைப் பெற்றுக்கொள்ளவும், ஆட்சேபனைகளை முன்வைக்கவும் கால அவகாசம் கோரினார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, பிரதிச் செயலாளர் நாயகத்தைப் பணி இடைநிறுத்தம் செய்வதற்கு நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார். அவரின் நியமனம் மற்றும் ஒழுக்காற்று அதிகாரம் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடமே உள்ளது என்பதையும், சம்பளமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த இடைநிறுத்தம் சட்டத்திற்கு முரணானது என்பதையும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், குறிப்பிட்ட திகதிகளில் விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான விசாரணையை நடத்த முடிவு செய்தது. இந்த மனுவில் சபாநாயகர், நாடாளுமன்றச் செயலாளர் நாயகம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட 14 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக ஆவணங்களை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Exit mobile version