மேற்கு அவுஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் பகுதியில் உள்ள வார்டன் கடற்கரையில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் புதைந்திருந்த ஒரு போத்தலில் இருந்து கடிதங்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்திக்குரிய கடிதம், 1916 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி எழுதப்பட்டதாகும். இதனை முதல் உலகப் போரில் பிரான்ஸ் போர்க்களத்துக்குச் செல்லும் HMAT A70 Ballarat கப்பலில் பயணித்த இரண்டு ஆஸ்திரேலியப் படைவீரர்களான மால்கம் நெவில் மற்றும் வில்லியம் ஹார்லி ஆகியோர் எழுதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய போத்தலைக் கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த டெப் ப்ரவுன் என்ற பெண், தனது கணவர் பீட்டர் மற்றும் மகள் பெலிசிட்டியுடன் இணைந்து கடற்கரையில் கண்டெடுத்துள்ளார்.
போத்தலுக்குள் இருந்த கடிதங்கள் பென்சிலால் எழுதப்பட்டிருந்ததாகவும், அதில் இருவரும் HMAT A70 Ballarat கப்பலில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்களின் தகவல்படி, இந்தக் கடிதம் எழுதப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு, நெவில் போரில் உயிரிழந்தார். மற்ற வீரரான ஹார்லி, இருமுறை காயமடைந்தபோதும் உயிர் பிழைத்து, பின்னர் 1934 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
 
                                                                                                                                                 
                                                                                                     
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
			         
 
			         
 
			        