இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும் பாரியளவில் உயர்வடைந்துள்ளன. குறிப்பாக, ஒரு மூட்டை சீமெந்தின் (Cement Bag) விலை சுமார் 175 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் இன்று (மார்ச் 24, 2026) உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விலை அதிகரிப்பையடுத்து, சந்தையில் ஒரு மூட்டை சீமெந்து தற்போது 2,250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி ஏற்ற இறக்கம் போன்ற காரணிகளே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குப் பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஏற்கனவே ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சீமெந்து விலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போதைய இந்த உயர்வு கட்டுமாணப் பணியில் ஈடுபட்டுள்ள சாதாரண மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சீமெந்து மாத்திரமன்றி, ஏனைய அடிப்படை கட்டுமானப் பொருட்களான மணல் (Sand), கருங்கல் (Metal/Stone) மற்றும் செங்கல் ஆகியவற்றின் விலைகளும் ஏற்கனவே அதிகரித்துள்ளன. ஒரு கியூப் மணல் மற்றும் கருங்கல்லின் விலை போக்குவரத்துத் தூரத்தைப் பொறுத்து 5,000 முதல் 10,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தமது வீட்டு நிர்மாணப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துமாறும், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறும் அரசிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக லாபத்திற்குச் சீமெந்து விற்பனை செய்யப்படுவது குறித்துத் தகவல் தெரிந்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.

