ஹொங்கொங் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து: இரு விமான நிலையப் பணியாளர்கள் பலி!

1 32 1

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (அக் 20) தரையிறங்கும் போது, ஒரு சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி, ஒரு ரோந்து காரில் மோதி கடலில் மூழ்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரும் விமான நிலையப் பாதுகாப்பு ஊழியர்கள் ஆவர்.

விமான நிலைய அதிகார சபையின் விமான நிலைய நடவடிக்கைகளுக்கான நிர்வாகப் பணிப்பாளர் ஸ்டீவன் யூ இது குறித்து விளக்கமளித்தார்.

துபாயிலிருந்து வந்த போயிங் 747 சரக்கு விமானம் நேற்று அதிகாலை 4:00 மணிக்குத் தரையிறங்க முற்பட்டபோது, விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று, வேலியைத் தாண்டி பாதுகாப்பு ரோந்து காரில் மோதி கடலில் பாய்ந்தது.

ரோந்து காரில் இருந்த 30 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. 41 வயதுடைய மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

1998 இல் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து நடந்த மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version