மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், நாளை (18) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
வாரத்தின் ஏனைய நாட்களை விடுத்து, புதன்கிழமையை விசேட விடுமுறை தினமாகத் தெரிவு செய்தமைக்கான காரணத்தையும் அவர் விளக்கினார். வெள்ளிக்கிழமையை விடுமுறையாக அறிவித்து, வெள்ளி முதல் ஞாயிறு வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வழங்குவது அரச அலுவலகப் பணிகள் மற்றும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாரியளவில் பாதிக்கும் என்பதால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
மாறாக, வாரத்தின் நடுப்பகுதியான புதன்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பதன் மூலம், திங்கள் – செவ்வாய் மற்றும் வியாழன் – வெள்ளி ஆகிய நாட்களில் அரச அலுவலகங்களைச் சீராக இயக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் பொதுச் சேவைகள் முழுமையாக முடங்காமல் இருப்பதை உறுதி செய்ய முடிவதோடு, ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் எரிபொருள் தேவையையும் கணிசமாகக் குறைக்க முடியும் என அரசாங்கம் நம்புகிறது.
சர்வதேச ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைக்குத் தயாராகும் ஒரு தற்காலிகத் தீர்வாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச அலுவலகங்கள் திறக்கப்படும் நாட்களைக் குறைப்பதன் ஊடாக, தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க முடியும் என அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தினார்.