இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

image 1200x800 41

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக் கௌரவிக்கும் வகையில் ‘யதிவர மாபிய நிவஹன’ (Yativara Maapiya Nivahana) என்ற புதிய தேசிய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடுமையான பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் பிள்ளைகளைச் சாசனத்திற்கு வழங்கிய, சொந்தமாக வீடற்ற பெற்றோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முதற்கட்டமாக 1,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “உங்களுக்கென ஓரிடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக இது செயல்படுத்தப்படும். இதற்கென புத்தசாசன அமைச்சு மற்றும் வீடமைப்பு அமைச்சு இணைந்து சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவைப் பத்திரத்திற்குப் பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படும் தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளிகளுக்கும் புதிய வீடொன்றை அமைப்பதற்காக 1.5 மில்லியன் ரூபாய் (15 இலட்சம்) நிதி உதவி வழங்கப்படும். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்படும் இப்பணிகளில், பிரதேச மட்டத்திலான பங்களிப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வறிய நிலையில் உள்ள பௌத்த துறவிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

Exit mobile version