இலங்கையில் திரிபோசா (Thriposha) உற்பத்திக்கான மூலப்பொருளான சோளத்தின் தரத்தை மேம்படுத்தவும், விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்தவும் புதிய தேசிய கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
“மேம்படுத்தப்பட்ட திரிபோசா வேலைத்திட்டத்திற்கான தாங்குதிறன் கொண்ட தரப்பண்புடன் கூடிய சோளத்தை அடிப்படையாகக் கொண்ட உணவு முறைமை”.
இத்திட்டத்திற்காக கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை (KOICA) 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
இக்கருத்திட்டம் 2025 முதல் 2029 வரையான ஐந்தாண்டு காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும்.
அனுராதபுரம், மொனறாகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 7,500 சோளச் செய்கையாளர்கள் இதன் மூலம் நேரடியாகப் பயன்பெறவுள்ளனர்.
உலக உணவுத் திட்டத்தின் (WFP) ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இத்திட்டம், காலநிலை மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய மற்றும் போஷாக்கு நிறைந்த சோள உற்பத்தியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் திரிபோசா விநியோகம் எவ்விதத் தடையுமின்றி தரம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.