மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தின் மீது நேற்று (ஏப்ரல் 4, 2026) சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணுமின் நிலையத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, வளாகத்திலுள்ள ஒரு துணை கட்டிடம் சேதமடைந்துள்ளது. போரின் தொடக்கத்திலிருந்து இந்த அணுமின் நிலையம் இலக்கு வைக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி (Abbas Araghchi), ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸிற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், புஷெர் அணுமின் நிலையத்தின் மீதான தொடர் தாக்குதல்கள் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் கதிர்வீச்சு கசிவு (Radioactive Contamination) ஏற்படும் நேரடி அபாயத்தை உருவாக்கியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். “இந்தக் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டால் அது ஈரானை மட்டும் பாதிக்காது, வளைகுடா நாடுகளின் தலைநகரங்கள் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இந்தச் சம்பவம் குறித்துத் தீவிரக் கவலை வெளியிட்டுள்ளது. அதன் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் குரோசி (Rafael Grossi), அணுசக்தி நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் ஒருபோதும் போர் இலக்குகளாக மாற்றப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். தற்போது வரை அணுமின் நிலையத்தின் முக்கியப் பகுதிகள் சேதமடையவில்லை என்றும், கதிர்வீச்சு அளவில் எவ்வித அதிகரிப்பும் பதிவாகவில்லை என்றும் IAEA உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், அணு உலைக்கு மிக அருகில் தாக்குதல்கள் நடத்தப்படுவது ஒரு பாரிய அணுசக்தி விபத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தென் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள புஷெர் அணுமின் நிலையம், சுமார் 1,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முக்கியத் தளமாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் எரிசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்கும் நோக்கில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அணுமின் நிலையம் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் ‘ரோசாடம்’ (Rosatom) நிறுவனம் தனது பணியாளர்களை அங்கிருந்து வெளியேற்றி வரும் சூழலில், நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.