கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

Untitled 57

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி, கண்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய மாணவனும் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கண்டி புனித சில்வெஸ்டர் மற்றும் வித்தியார்த்த கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் பெரும் போட்டிக்கான (Big Match) ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே, இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்துடன் மோதி இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் புனித சில்வெஸ்டர் கல்லூரியின் 13-ஆம் தர கணிதப் பிரிவில் கல்வி பயின்று வந்த நெதுல நிம்தினு மற்றும் சஜீவ கருணாரத்ன ஆகிய இரு மாணவர்களுமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவன் உயிரிழந்த நிலையில், பின்னால் அமர்ந்து பயணித்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், வைத்தியர்களின் தீவிர முயற்சியையும் மீறி அந்த மாணவனும் உயிரிழந்ததாகப் பல்லேகெலே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரு பாடசாலைகளுக்கும் இடையிலான கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகவிருந்த நிலையில், விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்த செய்தி கண்டி நகர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இரு மாணவர்களும் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கியவர்கள் என அவர்களது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். பாடசாலை சமூகத்தினர் மற்றும் பழைய மாணவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் பேருந்தின் ஓட்டுநரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த மாணவர்களின் பூதவுடல்கள் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கொண்டாட்டங்கள் தொடர்பில் பாடசாலை நிர்வாகங்கள் மீள் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Exit mobile version