இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால், நாட்டின் வானிலை மற்றும் கடல் நிலவரங்களில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக, காலி முதல் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17) பதிவான தரவுகளின்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 128.9 மி.மீ என்ற மிக உயர்ந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதேவேளை, நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 13.4°C பதிவாகியுள்ளது. ஏனைய கடலோரப் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், களுத்துறை முதல் மன்னார் வரையான மற்றும் மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இதனால் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் வானிலை அவதானிப்புகளைப் பின்பற்றி மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

