பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

image 1200x800 9

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போன இருவரின் சடலங்களும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பலனாக இந்தச் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த அனர்த்தம் நிகழ்ந்தவுடனேயே, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்த அவசர கோரிக்கைக்கு இணங்க, இலங்கை இராணுவத்தினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் களமிறக்கப்பட்டனர். மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்த அபாயகரமான சூழலுக்கு மத்தியிலும், நவீன கருவிகளின் உதவியுடன் இராணுவத்தினர் இந்தப் பணிகளை முன்னெடுத்தனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காகவும், அடையாளங்காணலுக்காகவும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த கற்குவாரியில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும், அனர்த்தத்திற்கான காரணம் குறித்தும் பொலிஸாரும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

Exit mobile version