திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட கஸ்ஸப தேரர், இன்று (15) காலை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நவம்பர் 16-ஆம் திகதி திருகோணமலை கடற்கரைப் பகுதியில், கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலையை நிறுவி, இனங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் நான்கு பிக்குகள் உட்பட ஒன்பது பேரை நேற்று (14) திருகோணமலை நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
விளக்கமறியலில் உள்ள ஏனைய பிக்குகள் மற்றும் நபர்கள் வழக்கம் போல் உணவை உட்கொள்ளும் நிலையில், பலாங்கொட கஸ்ஸப தேரர் மட்டும் இன்று காலை மற்றும் மதிய உணவுகளைப் புறக்கணித்து இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
தேரரின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து திருகோணமலை சிறைச்சாலை அதிகாரிகள், திருகோணமலை துறைமுகக் காவல்துறையினருக்கு உத்தியோகபூர்வமாகத் தகவல் வழங்கியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேரரின் இந்தத் திடீர் போராட்டத்தினால் சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது குறித்து நீதிமன்றத்திற்கும் மேலதிக விபரங்கள் அறிக்கையிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.