ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த சிகரமான கிராஸ்க்லோக்னரில் (Grossglockner – 3,798 மீட்டர்) கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த ஒரு துயரமான மரணம் தொடர்பான விசாரணை நாளை (பெப்ரவரி 19) தொடங்கவுள்ளது. அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரரான தாமஸ் பிளம்பெர்கர் (36), போதிய அனுபவமில்லாத தனது காதலி கெர்ஸ்டினை (33) கடும் குளிரில் மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்று, அவரை ஆபத்தான நிலையில் கைவிட்டுச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. -20°C கடும் குளிர் நிலவிய அந்த இரவில், காதலியை மலையுச்சியில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் தனியாக விட்டுவிட்டு தாமஸ் மட்டும் கீழே இறங்கியுள்ளார்.
விசாரணையின் படி, இரவு 10:50 மணியளவில் உதவிக்காக வந்த ஹெலிகாப்டரை, உதவி தேவையில்லை எனத் தாமஸ் சைகை காட்டித் திருப்பி அனுப்பியுள்ளார். பின்னர் நள்ளிரவு 2:00 மணியளவில், காதலி கடும் குளிரால் மயக்கமடைந்த நிலையில், அவரிடம் இருந்த பாதுகாப்புப் போர்வையோ அல்லது அவசர உபகரணங்களையோ கூட வழங்காமல் அவரை மலையிலேயே விட்டுச் சென்றுள்ளார். மேலும், மீட்புக் குழுவினர் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் தனது அலைபேசியை ‘சைலண்ட்’ முறையில் வைத்திருந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகாலையில் மீட்கப்பட்ட கெர்ஸ்டின் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. காதலியைப் பாதுகாக்கத் தவறியதோடு, சுயநலமாகச் செயல்பட்டதற்காகத் தாமஸ் மீது ‘கடுமையான அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்’ (Gross Negligent Manslaughter) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு, மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கிடையிலான ‘சட்டப்பூர்வப் பொறுப்பு’ (Legal Responsibility) குறித்த புதிய விதிகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.