ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நான்கு சுறா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து, அங்கிருந்த ஏராளமான கடற்கரைகள் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டுள்ளன.
சிட்னியின் வடக்குக் கடற்கரைப் பகுதிகளில் அலையாடிக்கொண்டிருந்த இருவர் சுறாவினால் தாக்கப்பட்டனர். இதில் ஒருவரின் கால்களைச் சுறா கடித்ததில், அவர் தற்போது மிகக் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிட்னிக்கு வடக்கே 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் ஆடவர் ஒருவர் சுறா தாக்குதலுக்கு உள்ளானார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள அனைத்துக் கடற்கரைகளும் மூடப்பட்டன.
அப்பகுதியில் பெய்து வரும் கனத்த மழை காரணமாகக் கடல் நீர் மங்கலாக (Murky Water) மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய சூழல் சுறாக்களைக் கடற்கரை நோக்கி ஈர்த்திருக்கக்கூடும் என்று கடல்சார் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 20 சுறா தாக்குதல்கள் நிகழ்ந்தாலும், குறுகிய காலத்தில் நான்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்காலம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் நிலையில், கடலில் இறங்குவதைத் தவிர்க்குமாறு உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.